இலங்கை அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு மற்றும் கிராமியப் பொருளாதார அபிவிருத்திக் கொள்கைகளுக்கு அமைவாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை (SDGs) நோக்கிய நகர்வை வலுப்படுத்தும் வகையிலும், யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவில் பூசைக்குளத்தினை புனரமைக்கும் செயற்றிட்டம் இன்று (03.06.2026) காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கையில் பன்முக வறுமையை முற்றாக ஒழித்து, கிராமியப் பொருளாதாரத்தை சுயமாகக் கட்டியெழுப்பும் நோக்கில், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சினால் மக்களின் வரிப்பணத்திலிருந்து 25,000 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் 'ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்' எனும் தேசிய திட்டம் கடந்த 2026 ஜூன் 02 அன்று நாடளாவிய ரீதியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன் ஒரு கட்டமாக, தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவின் J/343 வரணி இயற்றாலை கிராம அலுவலர் பிரிவில், பருத்தித்துறை – கொடிகாமம் பிரதான வீதிக்கு அருகாமையில், சிட்டிவேரம் அம்மன் கோவிலுக்கு வடக்கு பக்கமாக அமைந்துள்ள பூசைக்குளத்தினை புனரமைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு (2026.06.03) புதன்கிழமை காலை 8:00 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது. தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ க.இளங்குமரன் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. சிட்டிவேரம் ஆலய குருவின் அருளாசியுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆரம்ப விழாவில், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வரணி இயற்றாலை கிராம அலுவலர் பிரிவின் பிரஜாசக்தி உறுப்பினர்கள், கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் ஏனைய கிராம பிரிவுகளின் பிரஜாசக்தி தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். மக்களின் நேரடிப் பங்கேற்புடன் கூடிய (People's Participation) இந்த அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், 5 மில்லியன் நிதிஒதுக்கீட்டில் பூசைக்குளத்தினை புனரமைப்பதற்காக அமைச்சினால் கொள்கையளவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இக் குளப்புனரமைப்பின் மூலம் கோடை காலத்தில் தங்கு தடை இன்றி கால்நடைகளுக்கான குடிநீர் கிடைப்பனவு உறுதிப்படுத்தப்படுவதுடன் நிலத்தடி நீர் பாதுகாப்பும் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.