தென்மராட்சி பிரதேசத்தில் டெங்கு கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலானது பிரதேச செயலாளர் திரு F.C சத்தியசோதி அவர்களின் தலைமையில் 12.09.2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்றுக்கொண்ட பிரதேச செயலாளர் எதிர்வரும் காலம் மழை காலம் என்பதனால் நீர் தேங்ககூடிய கொல்கலன்களை உரிய முறையில் அகற்றுதல், விழிப்புணர்வு செயற்பாடுகள் மற்றும் சிரமதான பணிகளை முன்கூட்டியே மேற்கொள்வதன் மூலம் நாம் டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துகொள்ளலாம் எனவும் டெங்கு நோய் தொடர்பாக தொடர்ச்சியான கட்டுப்பாட்டு கண்காணிப்பு அவசியம் எனவும் தெரிவித்து இதற்கு அனைவரின் ஒத்துழைப்பினையும் வழங்குமாறு கேட்டுகொண்டார்.கிராம சேவையாளர்கள் தலைமையில் கிராம மட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டு கூட்டங்களை நடாத்தி அது தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலாளர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.கிராம மட்ட உத்தியோகத்தர்கள் அவர்களுடைய கிராம மட்ட பொது சுகாதார பரிசோதகர்களுடன் தொடர்பு கொண்டு விழிப்புணர்வு நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் தெரிவித்தார்.
சிரேஷ்ட பொதுசுகாதார பரிசோதகர் கருத்து தெரிவிக்கையில்,டெங்கு நோயாளர்கள் அதிகம் காணப்படும் கிராம அலுவலர் பிரிவுகளாக சவாகச்சேரி, மண்டுவில், நுணாவில் மேற்கு , கைதடி போன்ற பகுதிகள் இனங்காணப்பட்டதாகவும் விசேட டெங்கு ஒழிப்பு வாரமாக எதிர்வரும் 22,23,24ம் திகதிகளில் கைதடி வடக்கு, கொடிகாமம் தெற்கு, கொடிகாமம் மத்தி நகரப்புரத்தை அண்டிய பிரதேசங்கள் மீசாலை கிழக்கு போன்ற கிராம அலுவலர் பிரிவுகளில் களத்தரிசிப்பு, விழிப்புணர்வு செயற்பாடுகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.பிரதிக்கல்வி பணிப்பாளர்(தமிழ்) அவர்கள் டெங்கு கட்டுப்பாடு பற்றிய மாதாந்த அறிக்கை சகல பாடசாலைகளில் இருந்தும் அனுப்பி வைக்கப்படுகிறது எனவும் இதற்கு தாங்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார்
வர முன்னர் காத்துக்கொள்ளும் நடவடிக்கையாக டெங்கு நுளம்பு பரவும் இடங்களில் கூடுதலான கவனம் எடுக்குமாறும் பொதுமக்கள் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையினை தொடர்ச்சியாக பேணி வருமாறும் கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள வெள்ள வாய்க்கால் தொடர்பான விபரங்களினையும் வழங்குமாறும் வெள்ள வாய்க் காலினை சீர்படுத்துவதன் மூலம் வெள்ள அனர்த்தம் மற்றும் டெங்கு நோயிலிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம் எனவும் கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் அவர்கள் அழைப்பை ஏற்று கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர், பிரதிக்கல்விப் பணிப்பாளர், சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர்கள் நகரசபை,பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் இதனுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிரமிட் திட்டங்களின் பரவலாக்கத்திற்கு எதிரான தேசிய விழிப்புணர்வு கலந்துரையாடல் மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய அலுவலரினால் 18.08.2025 பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தென்மராட்சி பிரதேச செயலாளராக திரு F.C சத்யசோதி அவர்கள் 2025.09.03 அன்று காலை 9.20 மணியளவில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.பிரதேச செயலாளர் அவர்களை வாழ்த்தி வரவேற்கின்றோம் .

கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் ஹிமிகம(உரிமை) திட்டத்தின் இலவச காணி பத்திரம் வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(13.08.2025) காலை 9.00 மணிக்கு பளை மத்திய கல்லூரியில் நடைபெற்றது.இதில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 300 இலவச காணி உறுதிப்பத்திரங்களும் , யாழ் மாவட்டத்தின் சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 32 இலவச காணி உறுதிப் பத்திரங்களுமாக மொத்தமாக 332 பயனாளிகளுக்கு இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால்காந்த, கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ் - கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான இ.சந்திரசேகரன், காணி மற்றும் நீர்ப்பாசனப் பிரதி அமைச்சர் Dr.சுசில் ரணசிங்க, யாழ் - கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.கே. நிஹால், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் ரி.விமலன், சர்வமத தலைவர்கள், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி), பச்சிலைப்பள்ளி மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், துறை சார்ந்த திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியில் 53 ஆண்டுகளாக, காணி உறுதியில்லாமல் வாழ்ந்து வந்த மக்களுக்கு இந்த காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

















